Sunday, February 7, 2016

14. மணமகளே வா!

அறைக்கதவு சத்தமில்லாமல் திறந்து மூடியது. கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான். பூமியில் கால் படாமல் நடந்து வரும் தேவதை போல் சத்தமில்லாமல்  நடந்து வந்தாள் அவள். பூரணமான முதல் இரவு அலங்காரம். மேடுபள்ளம் பார்த்து நடப்பதிலேயே கவனம் இருப்பதுபோல் தலை தொங்கி இருந்தது.

அவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். முகவாயை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். ஏராளமான பட்டுப்புடவைக்கு நடுவே இடையே கொஞ்சமாகத் தெரிந்த முகத்தின் சிவப்பு இரட்டிப்பாயிருந்தது. பெண்கள் நாணம் கொள்வது தங்கள் நிறத்தை மிகைப்படுத்தக் காட்டத்தானோ என்று நினைத்துக் கொண்டான்.

வெறியூட்டும் அழகு. ஆனால் இதை மெதுவாக, நிதானமாக, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். இரவு முழுவதும் எதற்காக இருக்கிறது?

"ஷீலா!"

"ம்..." துரத்திலிருந்து கேட்பதுபோல் அவள்  குரல் கேட்டது.

"என்னை உனக்குப் பிடிச்சிருக்கா?"

அவள் பதில் சொல்லவில்லை. வெட்கமா? அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான்?' என்ற நினைப்பா? அல்லது 'என் அபிப்பிராயத்க்தை யார் கேட்டார்கள்?' என்று மனதுக்குள் குமுறலா?

அவன் சற்றும் எதிபாராத வகையில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களால் அவன் முகத்தில்...

ஓ! பாலசந்தர் பட நாயகி போல் மறைமுகமாக பதில் சொல்லி விட்டாள். 'தாங்க யூ!'

"எனக்கு ஒரு சந்தேகம்."

'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"முதல் இரவுக்கு இவ்வளவு அலங்காரங்கள் என்? அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன்?"

அவள் கைகளால் தன முகத்தை மூடிக் கொண்டாள். 'ரொம்பவும்தான் வெட்கப்பட வைக்கிறான்' என்று நினைத்துக் கொள்வாளோ?

மிக மென்மையான மஞ்சள் நிறக் கைகளையும், விரல்களையும் பார்த்தான். வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃ பிங்கர் என்று பெயர் வைத்தவன் ஒரு அருமையான கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது பிஞ்சு வெண்டைக் காய்களைப் படக் படக் என்று ஒடித்துத் தின்றிருக்கிறான். அது போல் இந்த விரல்களையும்...


அவள் விரல்களை இழுத்துத் தன் உதடுகளில் பதித்துக்கொள்ளத்தான் முடிந்தது.

பார்த்து ரசித்தது போதும். இனி..

அவள் சேலைத்தலைப்பை மெல்ல விலக்கினான். அவள்   மீண்டும் தன் கைகளில் முகத்தை மறைத்துக் கொண்டாள். நீல நிற ரவிக்கை அவனுக்கு நல்வரவு கூறியது. ஏராளமான இடையில் செழுமையான மடிப்புகள்.

முகத்தழகை மட்டுமே பார்த்து அவளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் எல்லா விதங்களிலுமே அவள்  ஒரு முதல் தர அழகிதான் என்ற உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான்.

இறுக்கமான கேசத்தை மடியில் பற்றி அதன் அடியைத் தேடி அலைந்தான். அவள் முதுகினுடே ஊர்ந்த விரல்கள் முதுகுக்குக் கிழே அவள் பின்னல் வந்து முடிவதைத் தொட்டு உணர்ந்தன.

இனியும் அவனுக்குப் பொறுமை இல்லை. தம்புராவின் உறையை நீக்கிச் சுருதி சேர்க்க வேண்டியதுதான்.

விடிகாலையில் அவன் கண் விழித்தபோது அவள் முகம் கழுவி உடை உடுத்தித் தன்னைச் சரி செய்து  கொண்டிருந்தாள். முகத்தில் இப்போது நாணம் இல்லை. இலேசாகக் களைப்பு தெரிந்தது.

"என்ன அதற்குள்?" என்று அவள் கையைப் பற்றினான்.

அவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டாள். "பொழுது விடியப் போகிறது, தெரியும் இல்லையா? இப்போது மணி ஐந்தரை."

அவன் பெருமூச்சுடன் எழுந்தான்.கழற்றி வைத்திருந்த தன பாண்ட் பாக்கெட்டைத் துழாவியபடியே . "ரொம்ப நன்றி ஷீலா! உண்மையாகவே நேற்று இரவு எனக்கு முதல் இரவுதானோ என்று  தோன்றுகிறது. எப்படி உன்னால்  இவ்வளவு அருமையாக ..."

"ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு வகை. நீங்கள் முதல் இரவு மனைவி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அப்படி நடந்து கொண்டேன். உங்களைத் திருப்திப் படுத்துவதுதானே என் கடமை? வருகிறேன்" என்று கிளம்பினால், அவன் கொடுத்த நூரு ரூபாயைத் தன ரவிக்கைக்குள் திணித்தபடியே.

('ராணி' வார இதழ் 19/6/83இல், 'விஸ்வாமித்திரன்' என்ற புனைபெயரில் வெளியானது.)




Friday, February 5, 2016

13. சங்கிலிக் கணுக்கள்


வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அனுராதா என்ற தன் பெயரை அனு என்று சுருக்கிச் செல்வகணபதி அழைத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.

செல்வகணபதி அவளுடைய முதலாளி. அவள் வேலையில் சேர்ந்தபோது அவர் மானேஜிங் டைரக்டர் - எம்.டி. அவள் அவருடைய பி.ஏ. இருபது வருடங்களுக்குப் பிறகு அவள் எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி என்ற நிலைக்கு உயர்ந்து விட்டாள். செல்வகணபதி இன்னும் எம்.டியாகத்தான் இருக்கிறார்!

என்னதான் பதவி உயர்ந்தாலும் இப்போதும் அவள் செல்வகணபதியின் உதவியாளர்தான். ஆனால் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இப்போது அவளே சிலருக்கு மேலதிகாரி.அவளை விட உயர்ந்த பதவியில் இருக்கும் பொது மேலாளர் (ஜி.எம்.) கூட அவளிடம் சற்று மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார். பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பாயிற்றே!

இதையெல்லாம் விடப் பெரிய வித்தியாசம், இப்போதெல்லாம் அவள் செல்வகணபதி கூப்பிட்ட குரலுக்கு ஓட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் அறைக்கு வெளியே தட்டெழுத்து எந்திரத்தின் முன் அமர்ந்துகொண்டு, சுருக்கெழுத்து உபகரணங்களுடன் அவருக்குச் சேவை செய்யக் காத்திருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.

அவளுக்கென்று தனி அறை. அவள் வாய்மொழியாக வடிக்கும் கடிதங்களைக் காகிதங்களில் ஏற்றும் உதவியாளர்கள் என்று அவளுக்கே ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. முக்கியமான அலுவல் இருந்தால் ஒழிய செல்வகணபதியின் அறைக்கு அவள் செல்ல வேண்டியதில்லை. ஏன், இரண்டு மூன்று நாட்கள் அவரைச் சந்திக்க வேண்டிய தேவை இல்லாமல் கூடக் கழிந்திருக்கின்றன.

ஏசியின் இதமான குளிர் உடலுக்கு இதமளித்தாலும், எப்போதும் அவள் உள்ளே கனன்று கொன்டிருக்கும் வெப்பம் அவளைச் சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. அந்த நெருப்பு என்றாவது அணையுமா என்று தெரியவில்லை.

'நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ?
இறைவனின் பொறுப்பு'

என்ற திரைப்படப் பாடல் வரிகள் அடிக்கடி அவள் நினைவில் வந்து போகும். அவள் கொண்ட நெருப்பை அணைக்கின்ற ஆள் அவளுடனேயே இருந்துகொண்டுதான் இருக்கிறான். ஆனாலும்...

இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை ஒவ்வொரு நாளும் எத்தனை முறை நினைக்க வேண்டியிருக்கிறது! ஒரு ஆழமான காயம் தொடர்ந்து ஏற்படுத்தும் குத்துவலி போல் நிரந்தரமான வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நினைவு! இந்த வேதனையைச் சுமந்து கொண்டு எப்படி  இவ்வளவு காலம் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சில சமயங்களில் அவளுக்கு வியப்பாக இருக்கும்.

திருமணத்துக்கு முன்பு அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக வேலையை விட நேர்ந்தது. வேலைக்குப் போகாமல் வீட்டில் தன்னிச்சையாகப் பொழுதைக் கழிப்பதில் ஒரு சுகம் இருந்தது. இந்த சுகத்தைக் கொஞ்ச நாள் அனுபவிப்போமே என்று வேலைக்குப் போவதைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. அவள் கணவன் மூர்த்தியும்  அது  பற்றிப் பேசவில்லை. பிறகு பிரசவம், குழந்தை என்று சில  வருடங்கள் ஒடி விட்டன.

சுகன்யாவுக்கு மூன்று வயது நெருங்கியபோதுதான் அனுராதாவுக்கு மீண்டும் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சில மாதங்களில் சுகன்யாவை மழலையர் பள்ளியில்  சேர்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான் வேலைக்குப் போவதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று அவளுக்குத் தோன்றியது. வேலைக்குப் போவதற்கான பொருளாதாரக் காரணங்கள் எதுவும் இல்லை என்பதால் மூர்த்தி மறுப்பு சொல்வானோ என்று பயந்தாள். ஆனால் மூர்த்தி, "உனக்கு எது பிடித்திருக்கிறதோ அப்படிச் செய்து கொள்" என்று சொல்லி விட்டான்.

எனக்கெனவே மூன்று ஆண்டுகள்  பழகியதில் மூர்த்தியின் புரிந்து கொள்கிற மனப்பான்மையும், மற்றவர்களைச் சங்கடப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையையும் கண்டுணர்ந்து பெருமிதம் கொண்டிருந்தவளுக்கு, அவன் மீது இருந்த மதிப்பு மேலும் கூடியது.

ஆனால் அவள் எதிர்பார்த்தபடி உடனே வேலை கிடைத்து விடவில்லை. அவள் படிப்பு, அனுபவம், அறிவுக்கூர்மை இவற்றையும் தாண்டி, அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் பலருக்கும் ஒரு பொதுவான தயக்கம் இருந்ததை அவள் உணர்ந்தாள். 'ஒருவேளை நான் பொழுதுபோக்குக்காக  வேலைக்கு வருகிறேன், நிலைத்து நிற்க மாட்டேன் என்று  தயங்குகிறார்களோ?'

ஒருவேளை இனி தனக்கு வேலை கிடைக்காதோ என்ற சந்தேகமும் அவளைப் பற்றிக் கொண்டது. அப்படி வேலை  கிடைக்காமல் போனால்  தனக்குப் பெரிய பதிப்பு எதுவும் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாலும் அது ஒரு அவமானகரமான விஷயமாகத்  தோன்றியது. 'என்னை எப்படி நிராகரிக்கலாம்?' என்ற அகம்பாவச் சிந்தனையின் வெளிப்பாடோ இது என்றும் தோன்றியது. எப்படியிருந்தாலும் தன முயற்சியில் வெற்றி அடையாமல் விடுவதில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

நான்கு ஐந்து மாதங்கள் முயன்ற பிறகு அவளுக்கு இந்த வேலை கிடைத்தது. செல்வகணபதி அவளைக் கேட்டது ஒரே ஒரு கேள்விதான். 
"மிஸஸ் அனுராதா, நீங்கள் இந்த வேளையில் தொடர்ந்து இருப்பீர்களா?"

"இருப்பேன். நிச்சயமாக இருப்பேன்," என்று உறுதி அளித்து விட்டு உற்சாகத்துடன் வேலையில் சேர்ந்தாள்.

நேர்காணலின்போது 'மிஸஸ் அனுராதா' என்று மரியாதையாக அழைத்தவர், வேலையில் சேர்ந்த முதல் நாளே 'அனு கொஞ்சம் வரியா? ஒரு லெட்டர் டிக்டேட்  பண்ணணும்' என்று உரிமை எடுத்துக் கொண்டார்.

'அன்றே இதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். என் பெயரைச் சுருக்கிக் கூப்பிடுவது  எனக்குப் பிடிக்காது' என்று சொல்லியிருக்க வேண்டும். 'நான் திருமணமானவள். நீங்களும் தொண்டுக் கிழவர்  அல்ல. எனவே என்னை 'நீ' என்று ஒருமையில் அழைக்க வேண்டாம்' என்று பணிவாகச் சொல்லியிருக்கலாம்'

அன்று அப்படிச் சொல்லியிருந்தால், அந்த அசம்பாவிதம் நடந்திருக்காதோ என்னவோ?

அலுவலகத்தில் எல்லாம் மிக இயல்பாகவும், சரியாகவுமே நடந்து வந்தன. செல்வகணபதி அவளுடைய உழைப்பை மதித்தார், வெளிப்படையாகப் பாராட்டினார்.

ன்று ஒரு முக்கியமான வாடிக்கையாளருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. வெளியூரிலிருந்து வரும் அவருக்கு ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஓட்டலில் அவரை செல்வகணபதி சந்தித்துப் பேசுவதாக ஏற்பாடு. இது போன்ற முக்கியமான சந்திப்புகளின்போது அனுராதாவும் உடனிருக்க வேண்டியிருக்கும். சந்திப்பின்போது எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகளை உடனுக்குடன் குறித்துக் கொள்வது அவளது பொறுப்பு.

அன்று  அவர்கள் ஓட்டலுக்குச் சென்றபோது அந்த வாடிக்கையாளர் வந்திருக்கவில்லை. இருவரும் ஓட்டல் அறையிலேயே சற்று நேரம் காத்திருந்தபோது வாடிக்கையாளரிடமிருந்து  ஓட்டலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ ஒரு தடங்கலினால் தான்  வருவது தாமதப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அவர் வரும் வரை அங்கேயே காத்திருப்பதா  அல்லது அலுவலகத்துக்குப் போய்விட்டு அப்புறம் வருவதா என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே  சற்றும் எதிர்பாராமல் செல்வகணபதி அவள் கைகளைப் பற்றினார்.

அதற்குப் பிறகு நடந்தவற்றை, பிறகு நினைத்துப் பார்த்தபோது அவளுக்கே சில விஷயங்கள் தெளிவாக இல்லை. ஒரு முக்கிய வாடிக்கையாளரைச் சந்திக்கப் போகிறோம் என்பதால் அவள் தன்னைச் சற்று அதிகமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அந்த அலங்காரம் செல்வகணபதியிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால் நான்  ஏன்  நடந்ததைத் தடுக்கவில்லை? தடுக்க முயற்சி செய்ததாகத்தான் தோன்றியது. ஆனால் அது பலவீனமான முயற்சி என்று அவளுக்கே தெரிந்தது. அவள் இன்னும் சற்று ஆவேசமாகத் தடுத்திருந்தால் செல்வகணபதி பின்வாங்கி இருக்கலாம். நான் ஏன் அப்படிச் செய்யவில்லை? முதலாளி  என்ற விசுவாசமா அல்லது பயமா? இந்த வேலை போய்விட்டால் மீண்டும் வேலை கிடைக்காது என்ற எச்சரிக்கை உணர்வா அல்லது...... இது ஒன்றும் தவறில்லை என்று ஆழ்மனத்தில் தோன்றிய சமாதானமா?

எப்படியோ, எல்லாம் திடீரென்று நடந்து முடிந்து விட்டது. அவள் அதிர்ந்து நின்றபோது, " ஐ ஆம் சாரி அனு. நீ இப்போது வீட்டுக்குப் போய் விடு. பிறகு பேசிக் கொள்ளலாம்." என்ற செல்வகணபதி, டிரைவரை அழைத்துத் தன காரிலேயே அவளை வீட்டில் கொண்டு விடச் செய்தார்.

அடுத்த நாள் அவள் வேலைக்குப் போகவில்லை. மூர்த்தியிடம், "உடம்பு சரியில்லை, அசதியாக இருக்கிறது " என்றாள். உண்மையாகவே உடலிலும், மனதிலும் ஒரு அசதி வந்து குடிபுகுந்திருந்தது.

அதற்கு அடுத்த நாள் அவள் அலுவலகத்துக்குப் போனபோது ஒரு முடிவுடன்தான் போனாள். வேலையே விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. மூர்த்தியிடம் அப்புறம்தான் சொல்ல வேண்டும். வேலை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். நிர்வாக இயக்குனரின் அணுகுமுறை சரியில்லை என்று கோடி காட்டி, விட்டு விடலாம். 'ஏன் என்னிடம் சொல்லாமல் வேலையே விட்டாய்?' என்று கேட்கிற ஆள் இல்லை மூர்த்தி. ஆனாலும் அவள் திடீரென்று விலகியதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வான்.
சீக்கிரமே வேறு வேலை தேடிக்கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்னை இருக்காது என்று தோன்றியது.

அன்று அவள் அலுவலகத்தை அடைந்தபோது அவள் இருக்கையில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். அனுராதாவுக்குச் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நான் விலகுவதற்குள் செல்வகணபதியே என்னை அனுப்பி விட்டாரா?

அவளைப் பார்த்ததும் அவன் எழுந்து நின்றான். "மேடம், நீங்கள்தான் மிஸஸ் அனுராதா என்று நினைக்கிறேன். நீங்கள்  வந்ததும் சார் உங்களை உள்ளே வரச் சொன்னார்."

அனுராதா செல்வகணபதியின் அறைக்குள் நுழைந்தாள்.
"உட்கார் அனுராதா" என்றார் செல்வகணபதி. 'அனு' விரிந்து 'அனுராதா' ஆகியிருந்ததை அவள் கவனித்தாள். 'இனிமேல் நீ இங்கே வேலை செய்வது சரியாக இருக்காது. அதனால் விலகிக் கொள்' என்று செல்வகணபதி சொல்வதற்கு முன்னால்  தான் முந்திக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பில், முன்பே எழுதி வைத்திருந்த பதவி விலகல் கடிதத்தைக் கைப்பையிலிருந்து எடுத்து அவர் முன் நீட்டினாள்.

"நீ இப்படி ஒரு முடிவுக்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நேற்றே வேறொரு ஏற்பாடு செய்து விட்டேன்."

"பார்த்தேன்"  என்றாள் அனுராதா சுருக்கமாக.

"ஆனால் நீ நினைக்கிற  மாதிரி இல்லை. புதிதாக வந்திருக்கிற சேகர்  உனக்கு பதிலாக இல்லை, உனக்கு உதவியாக" என்றார் செல்வகணபதி.

அனுராதா புருவங்களை உயர்த்தினாள்.

"நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. நான் அதை நியாயப்படுத்த விரும்பவில்லை.  தவறு முழுவதும் என்னுடையதுதான். அடிப்படையான தவறு உன்னை இதுபோன்ற சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்ற நடைமுறையை உருவாக்கியது. சந்தர்ப்பங்களின்மீது பழி போட முடியாது என்றாலும் சந்தர்ப்பங்கள் தவறு நடப்பதற்கான வாய்ப்பை அதிகமாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. அதனாலதான் இந்த மாற்று ஏற்பாடு."

அனுராதா பதில் சொல்லவில்லை. செல்வகணபதியின்  மீது இருந்த கோபம் தணியாவிட்டாலும அவர் உண்மையாகவே நடந்ததற்கு வருந்துகிறார் என்று தோன்றியது. ஆனால் அதனால் என்ன பயன்?

"வேலையை விட்டு விலக நீ முடிவு செய்திருப்பது இயல்பான செயல்தான். ஆனால் அதனால் என்ன பயன் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். நீ இங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம். உன் வேலைப் பொறுப்புகளைக் கொஞ்சம் மாற்றப் போகிறேன். இத்தனை நாள் நீ செய்த வேலையை இனி சேகர் செய்வான். உனக்குச் சில நிர்வாகப் பொறுப்புகளைக் கொடுக்கப் போகிறேன். உனக்கு நம் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியும்.  அனுபவமும்  இருக்கிறது. இயல்பான புத்திசாலித்தனமும் இருக்கிறது. நிச்சயம் உன் புதிய பொறுப்பில், உன்னால் நம் நிறுவனத்துக்குப் பயனுள்ள விதத்தில் செயல் பட முடியும் என்று  நினைக்கிறேன்."

அனுராதா அமைதியாக இருந்தாள்.

"உனக்கு யோசிக்க நேரம் வேண்டுமென்றால்......"

"இல்லை. உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள். வெளியே செல்ல அறைக்கதவைத் திறந்தவள் சற்றே திரும்பி, "என் இருக்கையில் சேகர் உட்கார்ந்திருக்கிறார். எனக்கு வேறொரு இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள்" எனறாள்.

"இனிமேல் நீ என் பி.ஏ. இல்லை, எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி. அதனால் உனக்கு ஒரு தனி அறை ஏற்பாடு செய்கிறேன்" என்றார் செல்வகணபதி.

அதற்குப் பிறகு அவள் அலுவலக வாழ்க்கையே மாறி விட்டது. புதிய பொறுப்பில் அவள் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும், உற்சாகமான உழைப்பும் நிறுவனத்தின் செயல்பாட்டில் கணிசமான முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தன. செல்வகணபதியுடனான  சந்திப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அவர் அவளைக் கூப்பிடுவதையே பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அவள் தானாகத்தான் தேவைப்படும்போது  அவர் அறைக்குச் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தாள். அவளுடைய பதவி, ஊதியம், செல்வாக்கு, மதிப்பு எல்லாமே வேகமாக உயர்ந்தன.

அதற்குப் பிறகு செல்வகணபதி ஒருமுறை கூட அவளை அனு என்று அழைத்ததில்லை - அனுராதாதான். மற்றவர்களுக்கு அவள் 'அனு மேடம்' ஆகி விட்டாள்.

ஆனாலும் உள்ளிருந்து வாட்டும் நோய்போல் அந்தச் சம்பவம் அவளை உறுத்திக்கொண்டே  இருந்தது. மூர்த்தியிடம் அதை மறைத்ததை அவனுக்குச் செய்த பெரிய அநீதியாகக் கருதினாள்.

அவள் குடும்ப வாழ்க்கையிலும் பல மாறுதல்கள். சுகன்யா பொறியியல் பட்டம் முடித்துவிட்டு மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று விட்டாள். இன்னும் சில வருடங்களில் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.
அன்று இரவு மூர்த்தி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். "அனு, நீ ஒரு விஷயத்தையே அடியோடு மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்" என்றான்.

"எதை?"

"நமக்குக் கல்யாணமான விஷயத்தைத்தான்."

"உங்களுக்குப் பெண் ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்களா அல்லது அவள் இங்கே இல்லை என்கிற தைரியத்தில் பேசுகிறீர்களா?"

"இரண்டும் இல்லை. கல்யாணமானவர்கள் எல்லாம் திருமண தினம் என்று ஒன்றைக் கொண்டாடுவார்களாமே, கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"என்ன விளையாடுகிறீர்கள்? நாமும்தான் கொண்டாடி வருகிறோம். நம்முடைய அடுத்த திருமண தினம் ..... ஒ! இந்த மாதக் கடைசியில் வருகிறதே, மறந்து விட்டேன்."

"அதைத்தான் நான் சொன்னேன்."

"ஒகே!"

"இப்போதும் நீ ஒன்றை மறந்து விட்டாய்!"

"எதை?'

"நமக்குக் கல்யாணம் ஆகி இருபத்தைந்து வருடம் ஆகப் போகிறது என்பதை."

"மறக்கவில்லை. அதற்கு என்ன விசேஷமாக ஏதேனும் செய்ய வேண்டுமா?"

"பின்னே வேண்டாமா? சுகன்யா இங்கே இருந்திருந்தால் ஜமாய்த்திருப்பாள். அவள் இல்லாததால் சிம்பிளாக ஒரு கிராண்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று பார்க்கிறேன்."

"சிம்பிளாக கிராண்ட் பார்ட்டியா? ஜமாயுங்கள்!"

"கொஞ்சம் பேரைத்தான் கூப்பிடப் போகிறேன். அதனால்தான் சிம்பிள் என்று சொன்னேன். ஆனால் பார்ட்டி கிராண்டாக நட்சத்திர ஓட்டலில் நடக்கும்! யார் யாரைக் கூப்பிட வேண்டும் என்று இப்போதே பட்டியல் போட ஆரம்பித்து விடு. குறிப்பாக உன் எம்.டி யைக் கூப்பிட வேண்டும். அவரை நான் பார்த்ததே இல்லை."

அனுராதாவிடமிருந்து சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரு விம்மல் வெடித்தது.
மூர்த்தி அதிர்ந்து போய் விட்டான். "என்ன ஆச்சு அனு?"

இரண்டு நிமிடங்கள் குலுங்கிக் குலுங்கி அழுதபின் இருபது  ஆண்டுகளாக மனதில் அழுத்தி வைத்திருந்த துயரத்தை வாந்தி எடுப்பதுபோல் கொட்டித தீர்த்தாள்.

மூர்த்தி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொல்லி முடித்ததும், "சரி போய்த் தூங்கு. காலையில் பேசிக்கொள்ளலாம்" என்றான்.

அனுவுக்குத்  திடுக்கென்றது. சம்பவம் நடந்தவுடன் செல்வகணபதி, "இப்போது வீட்டுக்குப் போ. அப்புறம் பேசிக்கொள்ளலாம்" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஆனாலும் மனம் லேசாகியிருந்தது. இருபது ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த சுமை இப்போது இறங்கி விட்டதல்லவா?

காலையில் வழக்கம்போல் மூர்த்திக்குக் காப்பி கொண்டுபோய்க் கொடுத்தாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூர்த்தி காப்பி  தம்ளரை வாங்கி டீபாயில் வைத்தான்.சட்டென்று எழுந்து அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான். 
"அனு, ஐ லவ் யூ"

அனுவுக்கு மீண்டும் அழுகை பீரிட்டு வந்தது.

"இத்தனை வருடங்களாக இந்த வலியோடு நீ இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வேதனையாக இருக்கிறது" என்றான் மூர்த்தி. "காயம் ஏற்பட்டால் அதற்கு மருந்து போட வேண்டும். அதை மூடி வைத்து வலியோடு வாழ்ந்திருக்கிறாய். உன்னுடைய சங்கடம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் இவ்வளவு காலம் நீ இப்படி ஒரு மனச்சுமையோடு வாழ்ந்திருப்பது எனக்கு வலி ஏற்படுத்துகிறது."

"நீங்கள் ரொம்ப அற்புதமானவர். நான் மிகவும் கொடுத்து வைத்தவள்."

"எந்த ஒரு சங்கிலியும் அதன் மிகவும் பலவீனமான கணுவின் அளவுக்குத்தான் வலிமை பெற்றிருக்கும் என்று சொல்வார்கள். ஒரு கணு வலுவிழந்து விட்டால் அது சங்கிலியையே வலுவற்றதாக்கி விடும். பாதிக்கப்பட்ட கணுவை வெட்டி விட்டு மற்ற கணுக்களை இணைத்தால்தான் சங்கிலி வலுவாக இருக்கும். பல நிகழ்வுகளால் உருவாக்கப்படும் உறவுச் சங்கிலிக்கும் இது பொருந்தும்"

சில நாட்கள் கழித்து நடந்த அவர்கள் திருமண வெள்ளிவிழா விருந்தில் பங்கேற்ற செல்வகணபதியிடம் மூர்த்தி இயல்பாக, உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான்.